கோவை : மது அருந்திவிட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக ஆனைகட்டி சாலை விபத்தில் மனைவியை இழந்த சமூக ஆர்வலர் டாக்டர். ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை : மது அருந்திவிட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக ஆனைகட்டி சாலை விபத்தில் மனைவியை இழந்த சமூக ஆர்வலர் டாக்டர். ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 24ம் தேதி ஆனைகட்டி சாலை ஜம்புகண்டி பிரிவில் ஏற்பட்ட சாலை விபத்தில் மருத்துவரும், சமூக ஆர்வலருமான ரமேஷ் என்பவரின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது மகள் சாந்தலா எலும்பு முறிவு ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்த விபத்தை தொடர்ந்து மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மரணமடைந்த ஷோபனாவின் உடலை விபத்து நடைபெற்ற இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்றுக் கொண்ட வடக்கு வட்டாட்சியர் மதுபானக் கடையை தற்காலிகமாக மூடப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தால் நிரந்தரமாக மூடப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், உயிர்ச்சேதம் மற்றும் விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. பகுதி கழக செயலாளர் பையா கவுண்டர், த.பெ.தி.க. பொது செயலாளர் கு. ராமகிருட்டிணன், வி.சி.க. மண்டல செயலாளர் சுசி கலையரசன், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் சிவஞானம், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ரமேஷ் கூறுகையில், "சென்னை பெருநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். தற்போது அது கிராமப்புறங்களிலும் அதிகரித்து விட்டது. இதனால், சாலைகளில் பாதுகாப்பான பயண சூழல் மாறி விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மதுவினால் இளைஞர் சமூகம் சீரழிந்து வருகிறது. கேரள மாநிலத்தில் மது விற்பனை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது போல, இங்கும் செயல்படுத்த வேண்டும். மேலும், திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு திறம்படச் செயல்படுத்த முன்வர வேண்டும்," என தெரிவித்தார்.