கோவை : சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியின் மீது விதியை மீறி மாநகருக்குள் வந்த லாரி மோதியதில் சிறுமியின் கால் முறிந்த சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை : சிங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தாயாருடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியின் மீது விதியை மீறி மாநகருக்குள் வந்த லாரி மோதியதில் சிறுமியின் கால் முறிந்த சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெருகிவரும் சாலை விபத்தினை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் அதிகமாக சாலையில் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாநகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை அந்தந்த ஊருக்கு ஏற்ப நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகரில் காலையில் 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்கள் உள்ளே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதியை மீறி கனரக வாகனங்கள் சாலையில் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல்களும் ஆங்காங்கே சாலை விபத்துக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மாநகர காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதால் இழப்புக்களே அதிகம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 8.35 மணியளவில் வெள்ளலூரைச் சேர்ந்த சுமித்ரா என்ற ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, வெள்ளலூர் மேம்பாலத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி பாலத்தில் இறங்கிக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தை முந்தி சென்று மோதியது. இதில், லாரியின் சக்கரம் பள்ளிச் சிறுமியின் காலில் ஏறியது. இந்த விபத்தில் சிறுமியின் இடது கால் முறிந்தது. மேலும், சிறுமியின் தாயுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமியையும், தாயாரையும் உடனடியாக மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் ஆத்மா சரவணன் கூறியதாவது ;- இந்த சிங்காநல்லூர் பள்ளியில் 650-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளலூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இப்படி வரும் பொழுது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, சாலைகளில் வேகத்தடைகள் அமைக்காததால் வாகனங்கள் அதி வேகமாக வருகிறது. மேலும், வெள்ளலூர் சாலையானது குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்களும் மரணங்களும் நடைபெறுகிறது. இந்த சாலை விரிவாக்கம் தொடர்பாக சுற்றுவட்டார மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்லும் நேரங்களில் தடையை மீறி லாரிகள் மாநகரில் நுழைவது ஆபத்தை விளைவிக்கிறது.
இது போன்ற விபத்துக்கள் நாளை உயிர் பலிகளை ஏற்படுத்திவிடக்கூடாது. ஆகவே, தடைசெய்யப்பட்ட நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகருக்குள் வராமல் இருக்க காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.