கோவை : பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாடகை கார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை பெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாடகை கார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை பெற்றுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கவுண்டம்பாளையம் பகுதியில் வி.ஜி.எம். என்ற தனியார் டிராவல்ஸ் நடத்தி வருபவர் வெங்கடேஷ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நாளிதழ்கள் மூலம் மாதம் ரூ. 10,000 வருமானம் பெற ஒப்பந்த வாகனம் தேவை என்ற விளம்பரம் செய்து உள்ளார். இதனை நம்பி கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 38 வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து உள்ளனர். ஏழு மாதங்கள் முறையாகப் பணத்தை அளித்ததாகவும், இதனிடையில் கண் பார்வையற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உதவ அறக்கட்டளை துவங்க இருப்பதாகக் கூறி தலா ரூ. 3 லட்சம் அளிக்குமாறு கூறியதை நம்பி, பணம் கொடுத்து உள்ளனர்.
இதன் பின்னர், பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி பல்வேறு காரணங்கள் கூறியதால், சந்தேகமடைந்தவர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் 2018-ம் ஆண்டு புகார் அளித்துள்ளனர். அப்போது, விரைவில் பணத்தைத் திருப்பி தருவதாகவும், ஒப்பந்த வாகனங்களை விற்க விரும்புவோரிடம் முழு பணமும் கொடுத்து தானே வாங்கிக் கொள்வதாக வெங்கடேஷ் உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரும், பணம் கிடைக்கப் பெறாததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் புகார் அளித்தனர். அதன்பேரில், வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, வெங்கடேஷ் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்து, தங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு அளித்தனர்.