சென்னை: தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே தலைவராக இருக்க முடியும் என்றும் தொண்டர்களின் அரவணைப்பைப் பெற்றவராக ஸ்டாலினை பார்ப்பதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே தலைவராக இருக்க முடியும் என்றும் தொண்டர்களின் அரவணைப்பைப் பெற்றவராக ஸ்டாலினை பார்ப்பதாகவும் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சராகவும், ஜெயலலிதா மறைவுக்குப்பின் கட்சி பிளவடைந்ததைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் ஆதரவாளராகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், அ.மு.மு.க.வில் இருந்த செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய இருப்பதாகக் கடந்த இரண்டு தினங்களாக தகவல்கள் பரவின.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுடன் விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, செந்தில் பாலாஜி கட்சி மாறவிருக்கும் தகவலை உறுதி செய்தது. இந்தச் சூழலில், செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்தார். அதன் பிறகு செந்தில் பாலாஜி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இது குறித்து செந்தில் பாலாஜி பேசுகையில், "தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மு.க ஸ்டாலினை சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். ஸ்டாலின் மீதான ஈர்ப்பால், ஸ்டாலின் முன்னிலையில் அடிப்படை உறுப்பினராக திமுகவில் இணைந்து கொண்டேன். தொண்டர்களின் அரவணைப்பைப் பெற்றவராக ஸ்டாலினை பார்க்கிறேன். கரூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளேன்.
தற்போது ஆட்சி செய்கிற ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மக்கள் நலனுக்கு எதிராகவும், உரிமைகளைச் சூறையாடும் அரசாகவும் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை ஈ.பி.எஸ் அரசு விட்டுக்கொடுக்கிறது. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டேன். எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு , ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு வாக்களித்து, அடுத்த முதல் அமைச்சராக அவரை மக்கள் அமர வைப்பார்கள்.
நான் முன்பு இருந்த இயக்கத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றி இருக்கிறேன். தற்போது என் மனதில் இருந்த இருளை அகற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது சூரியன். கரூர் மாவட்டத்தில் திமுக வெற்றிக்கு நிர்வாகிகளோடு இணைந்து பாடுபடுவேன்," என்றார்.
மேலும், செய்தியாளர்கள் அவரிடம் டி.டி.வியை குறித்து கேள்வி எழுப்ப, "நான் திமுகவில் இணைந்தது டி.டி.வி தினகரனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தால் அது அரசியலில் மரபாக இருக்காது. தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு வேண்டாம், தேர்தலுக்குச் செல்லலாம் என நான் தான் முதலில் சொன்னேன். ஆனால், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன," என்றார்.
தொடர்ந்து, "ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க மூழ்கும் கப்பல், எனவே, ஸ்டாலின் தலைமையில் செயல்பட முடிவு செய்து ஒரு மாதமாக அ.ம.மு.க களப்பணியில் இருந்து ஒதுங்கி இருந்தேன். மத்திய அரசை வலிமையாக எதிர்க்கக் கூடிய தலைவர் மு.க ஸ்டாலின்," இவ்வாறு அவர் தெரிவித்தார்