கோவை : உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கபாதை சாலையில் உள்ள தடுப்புச்சுவரின் சிறுபகுதி உடைந்து கீழே விழுந்த பின்னரும் அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கோவை : உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கபாதை சாலையில் உள்ள தடுப்புச்சுவரின் சிறுபகுதி உடைந்து கீழே விழுந்த பின்னரும் அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள அவினாசி மேம்பாலம் கீழ் உள்ள சுரங்கபாதை சாலையில், புருக்பாண்ட் சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவரின் சிறுபகுதி கீழே விழுந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்னும் அது அகற்றப்படாததால் வாகன ஒட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், ரயில் போக்குவரத்தினால் வாகனங்கள் தடையின்றி செல்லவும் அவினாசி சாலை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் உள்ள ரவுண்டானாவில் இருந்து ரயில் நிலையத்தின் பின்புறம், கூட்செட் சாலை, மரக்கடை, புருக்பாண்ட் சாலை, பூ மார்க்கெட் ஆகிய இடங்களுக்குப் பாதை பிரிந்து செல்கிறது. அதேப் போலவே, மேம்பாலத்தின் கீழும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இந்த இடங்களுக்குச் செல்ல சாலைகள் உள்ளன.
இந்நிலையில், மேம்பாலத்தின் மேல்பகுதியில் ரவுண்டானவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ரவுண்டானாவில் உள்ள பழைய தடுப்பு சுவர்கள் நெடுஞ்சாலை துறையினரால் சீரமைக்கப்பட்டன. மேலும், குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, புருக்பாண்ட் சாலைக்கு செல்லும் வழியில் உள்ள தடுப்பு சுவர்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த தடுப்புசுவரின் சிறுபகுதி சாலையில் உடைந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனினும் அந்த தடுப்பு சுவரின் கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் சாலையிலேயே உள்ளன.
இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதால், இதனை உடனே அகற்றித் தடுப்பு சுவரைச் சீக்கிரம் சீர் செய்ய வேண்டும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விரைவில் அனைத்து தடுப்பு சுவர்களும் சீர்செய்யப்படும். கீழே விழுந்த சுவரின் கழிவுகளை மாநகராட்சி தான் அகற்ற வேண்டும்," என்றார்.