கோவை : 5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தை பொறுத்த வரை கழகங்களின் ஆட்சிதான் எப்போதும் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை : 5 மாநில தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தை பொறுத்த வரை கழகங்களின் ஆட்சிதான் எப்போதும் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கஜா புயல் குறித்து ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பிரதமரை நேரில் சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும்,மத்திய அரசு சார்பில் கூடுதல் விளக்கம் கேட்டு கொண்டதையும் இன்று அனுப்பபட்டதாக தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் 15,000 கோடி நிவாரணம் கேட்டு இருக்கின்றோம் எனவும், மத்திய அரசு எவ்வளவு கொடுக்கின்றது என பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும், 5 மாநில தேர்தல் முடிவுகளில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், தமிழகத்தை பொறுத்த வரை கழகங்களின் ஆட்சிதான் எப்போதும் நடைபெறும் என தெரிவித்தார்.
கர்நாடகா அரசு ஓவ்வொரு அணை கட்டும் போதும் தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என தெரிவித்த அவர், கர்நாடகத்தில் தொடர்ந்து அணைகள் கட்டுவதால் தண்ணீர் இல்லாமல் தமிழகம் பாலைவனமாக காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். காவிரி தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடப்பதில்லை என தெரிவித்த அவர், தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடந்ததாக வரலாறே கிடையாது எனவும் குற்றம்சாட்டிய முதல்வர், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் வரும் தண்ணீர் அங்கேயே தேங்கி, தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் எனவும் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து பெங்களூருக்கு குடி தண்ணீர் அளிக்க முடியும் என தெரிவித்த அவர்,பெங்களூருவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முயல்கின்றது எனவும் தெரிவித்தார்.
5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை என தெரிவித்த அவர், தேர்தலில் பெற்ற இடங்களும், வாக்குகளும் பெரிய வித்தியாசமில்லை எனவும், ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் பிரச்சினை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுங்கம் - இராமநாதபுரம் சந்திப்புக்கு இடையே 3.6 கீ.மீ தூரத்திற்கு 213 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் எனவும் பிப்ரவரி மாதம் இதற்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்த அவர், கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஓரு கீ.மி தூரத்திற்கு 60 கோடி மதிப்பில் ஒரு பாலமும், கோவை ஜி.என்.மில் சந்தப்பில் 50 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலமும் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.