கோவை : பெரிய தடாகம் பகுதியில் சுற்றிதிரியும் காட்டுயானைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை 17 -ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : பெரிய தடாகம் பகுதியில் சுற்றிதிரியும் காட்டுயானைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை 17 -ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை, பெரியதடாகம் மற்றும் ஆனைகட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் இரு காட்டு யானைகளைப் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் காட்டு யானைகளைப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விடும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆனால், காட்டு யானைகளைப் பிடிக்க துரித முறையில் நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர். இந்நிலையில், காட்டு யானைகள் மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வந்து செல்கின்றன. எனவே, இன்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் காட்டுயானைகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கந்தசாமி கூறுகையில், "காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் உத்ரவிட்டும் வனத்துறை அதிகாரிகள் அதைச் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். யானையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு எடுக்கவில்லையெனில் வனத்துறையை கண்டித்து வரும் 17 ம் தேதி சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போகிறோம்," என தெரிவித்தார்.