கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ம் தேதி விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கோவை : திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28-ம் தேதி விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினர் நாளை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
வரும் பிப்ரவரி மாதம் அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரூ, லக்னோ மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 10,000 பேர், நாளை முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதேபோல, வரும் 28-ம் தேதி மாபெரும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில், விமானங்களை இயக்குதல், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தினரும் நாளை தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த குமார் கூறியதாவது :- விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதன் மூலம், 5,000 முதல் 8,000 ஊழியர்கள் நேரடியாக வேலையை இழக்க நேரிடும். டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ போன்ற விமான நிலையங்களில் இந்திய விமானநிலைய அதிகாரச்சபை, ஜி.எம்.ஆர்., ஜி.வி.கே. ஆகிய தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது, 100 சதவீதம் தனியாருக்க தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்படுவது விமான நிலைய ஊழியர்கள் மட்டுமில்லை. தனியார்வசம் ஒப்படைக்கும்பட்சத்தில் டிக்கெட் விலை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கும், இவ்வாறு கூறினார்.
"முந்தைய ஒப்பந்தங்களில் இந்திய விமானநிலைய அதிகாரச்சபை முக்கியப் பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது, விமான நிலையங்கள் 100 சதவீதம் தனியார்வசமே ஒப்படைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, டெண்டர் விடப்படுகிறது. இதன்மூலம், அனுபவம் இல்லாத நிறுவனங்களும், இந்த டெண்டரில் பங்கேற்பது பெரிதும் பின்னடைவை ஏற்படுத்தும்," என்கிறார் விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கத்தின் கோவை கிளை செயலாளர் ஆர். கோவிந்தராஜன்.
இதனிடையே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என விமானநிலைய அதிகாரச்சபை ஊழியர்கள் சங்கம் உறுதியளித்துள்ள நிலையில், பணி புறக்கணிப்பு போராட்டம் நாடு முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.