திண்டுக்கல் : விடுமுறை அளிக்காததால் மனமுடைந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் : விடுமுறை அளிக்காததால் மனமுடைந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடி மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருபவர் தனபால். ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் பழனி ரயில்வேபீடர் சாலையில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இறந்த தனபாலின் தாயாருக்கு முதலாமாண்டு காரியம் செய்வதற்காக குடும்பத்துடன் ராமநாதபுரம் செல்வதற்காக திங்கட்கிழமை தனக்கு விடுமுறை வேண்டுமென்று உயரதிகாரியிடம் கேட்டுள்ளார். விடுமுறை அளிக்க மறுத்ததால் மனமுடைந்த தனபால் தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில், தனக்கு விடுப்பு அளிக்காததால் தாய்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய முடியாததால் மனவேதனை அடைந்ததாகவும், அதனால், தான் தற்கொலை செய்து தாயிடம் செல்வதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி, மகள் மற்றும் மகனுக்கும் உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி நகர போலீசார் தனபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனபாலின் கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக பாதிப்படைந்த இடங்களில் மின்கம்பங்கள் சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால் இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்க உயரதிகாரி மறுத்ததாகத் தெரிகிறது. கஜா புயல் பாதித்த பல இடங்களில் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை விடவும் அதிகமாக வேலை செய்வதால், மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், மின்வாரிய உதவி பொறியாளர் ஒருவரே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.