கோவை : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.
கோவை : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் மறுமணம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் - கெளசல்யா கடந்த 2015-ம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி ஓராண்டு இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில், கெளசல்யாவின் பெற்றோர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர், சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவி சாதி, ஆணவப் படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படும் விஷயங்களிலும் செயற்பாட்டாளராகவும் கெளசல்யா இருந்து வருகிறார்
இந்நிலையில், நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடன் கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்டார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அனைவரது முன்னிலையிலும் பறை இசை முழங்க, கவுசல்யாவும், சக்தியும் இணையேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.