கோவை : கோவையில் தொடர் திருட்டு சம்பவங்களை குறைக்க நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் 4 கார்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி, திருடர்களைக் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவையில் தொடர் திருட்டு சம்பவங்களை குறைக்க நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் 4 கார்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி, திருடர்களைக் கைது செய்துள்ளனர்.
பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்கும் நோக்கில் கோவை மாநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்படி பீளமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணையைப் பல்வேறு கட்டங்களாகப் பிரித்து, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வெவ்வேறு பகுதிகளில் நடத்திய விசாரணையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையினர், நேற்று மதியம் தொட்டிபாளையம் பிரிவு டாஸ்மார்க் கடை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த Tn 69 S 2212 என்ற எண் கொண்ட குவாலிஸ் காரை சோதனைக்காக போலீசார் தடுக்க முற்பட்டனர். அதிலிருந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய காரை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்த கார் நவம்பர் மாதம் 20 -ம் தேதி கோவை உடையாம்பாளையம் பகுதியில் இருந்து திருடப்பட்ட கார் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் காரில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (37), கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நெல்சன் (39), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை வீரன் (29), ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
மேற்கொண்டு காவல்துறை இவர்களிடம் நடத்திய விசாரணையில், பீளமேடு, இராமநாதபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் கார் திருட்டில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் போலீசார் மூவரையும் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த குவாலிஸ் கார் (Tn 69 S 2212), மேலும், நிசான் கார் (Tn 66 s1869), ஹோண்டா சிட்டி கார்(Tn 09 Y 5646), மாருதி ஆம்னி கார் (Tn 38 X 9232 ) ஆகிய 4 கார்களையும் காவல்துறை கைப்பற்றினர்.
