தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் யோகா நிகழ்ச்சி நடைபெறுவதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் யோகா நிகழ்ச்சி நடைபெறுவதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோழர்களின் தலைநகரமாக இருந்த பழம்பெரும் நகரம் தஞ்சாவூர். அங்கிருக்கும் பிரகதீஸ்வரர் கோவில் 11 -ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. பல வரலாற்று நாவல்களின் கதைக்களமாக திகழும் இக்கோவில் யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருமையுடையது. இந்நிலையில் சமீப நாட்களாகத் தஞ்சை கோவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
தஞ்சைக் கோவிலில் என்ன சர்ச்சை?
25 ஏக்கர் சுற்றளவு கொண்ட தஞ்சை பெரிய கோவிலில் இன்றும், நாளையும் வாழும் கலை அமைப்பிலிருந்து ஶ்ரீ ரவிஷங்கர் யோகா நிகழ்ச்சி நடத்த உள்ளார். ஏற்கனவே, இவர் யமுனை ஆற்றங்கரையில் உலக கலாச்சார விழா என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்வில் யமுனை நதிக்கரையை மாசுப்படுத்திய குற்றத்திற்காக வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்ததாகத் தெரிகிறது.
ஏற்கனவே, அந்த நிகழ்ச்சியை நடத்தி பலருடைய விவசாய நிலங்களையும், வனப்பகுதிகளையும் பாழ்படுத்தியதாக குற்றச்சாட்டு இருக்கும் பட்சத்தில், தற்போது தஞ்சை பெரிய கோவிலை குறிவைத்து ரவிசங்கர் வந்திருக்கிறார் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று மாலை தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்காகத் தஞ்சை கோவிலுக்கு அருகில் பந்தல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து, கோயிலின் உட்பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், நிகழ்ச்சிக்காக இடம் ஒதுக்கியதற்கும் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
பலதலைமுறைகளாகக் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு சேதம் வரும் என்பதால் சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்துக் கொண்டிருக்க நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வாழும் கலை அமைப்பினர், " இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே இதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டோம். நாங்கள் எந்த சுகாதாரக்கேடுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. இது யோகா நிகழ்ச்சி என்பதால் சத்தம் எழக் கூட வாய்ப்பில்லை. இந்து அறநிலையத்துறையும், தொல்லியல் துறையும் இரண்டு நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அனுமதி வழங்கினர்.
அந்த நிபந்தனையில், கோவிலுக்குப் பாதிப்பில்லாமலும், தற்காலிக பந்தல்களை அமைத்தும் நிகழ்ச்சியினை நடத்திக் கொள்ள சொன்னார்கள். அதை நாங்கள் கடைபிடிப்போம்,"என்றனர்.