கோவை : மத்திய அரசு மேற்கொண்டு வரும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து கனரா வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை : மத்திய அரசு மேற்கொண்டு வரும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து கனரா வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கனரா வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் பணிபுரியும் கனரா வங்கி ஊழியர்களின் மண்டலக் குழு ஆலோசனைக் கூட்டம், வேளாண் பல்கலைக்கழக வளாக அரங்கில் இன்று நடைபெற்றது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், ஜி.வி. மணிமாறன் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வங்கி ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் வங்கி சேவைகளை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் ஜி.வி. மணிமாறன் பேசியதாவது :- தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவற்றை இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஸ்டேட் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து வருவது முற்றிலும் பொய்யான தகவல். வங்கிகள் இணைக்கப்பட்ட பின்பு, ஸ்டேட் வங்கியின் லாபமும், சந்தை மதிப்பும் சரிந்துள்ளன. வங்கிகள் இணைக்கப்பட்டால் இதே நிலை தான் மற்ற வங்கிகளுக்கும் நேரும். தற்போது, வங்கி சேவைகள் அனைத்தும் ஆன்லைன்மயம் ஆக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவை மற்ற வங்கிகளின் சேவையை பாதிப்பதோடு, பொதுமக்களுக்கும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படும், என்றார்.
மேலும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, இரவு பகலாக கடுமையாக உழைத்த வங்கி ஊழியர்களுக்கு எந்தவித ஊக்கமும் அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
இம்மாதம், 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அளவில் போராட்டங்கள் நடத்த இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.