நீலகிரி : கோத்தகிரி அருகே தனியார் நிறுவன செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி : கோத்தகிரி அருகே தனியார் நிறுவன செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி அருகே கேர்பெட்டா கிராமத்தில் 300 குடும்பங்கள் மற்றும் அதனைச் சுற்றி 2,000 பேர் வசித்து வருகின்றனர். ஊர் மைய பகுதியில் தனியார் தொலைபேசி கோபுரம் (செல்போன் டவர்) அமைப்பதற்கு பொதுமக்கள் 6 மாதங்களுக்கு முன்பு ஆட்சேபனை செய்தனர். அப்போது, கோத்தகிரி வட்டாட்சியர் வேலைகளை தடுத்த நிறுத்தினர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தொலைபேசி கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இந்தப் பணிகளை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், கோத்தகிரி வட்டாட்சியர், காவல்துறையிடம் மனுக்கள் அளித்தனர்.
இருப்பினும், தனியார் தொலைபேசி நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோபுரம் அமைக்கும் வேலைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு, வட்டாட்சியரிடம் தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைத் திரும்ப ஒப்படைக்க முற்பட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் தற்காலிகமாக செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்துமாறு கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.