கோவை: சிறப்பாசிரியர்கள் பணிநியமன சான்றிதழ் சரிபார்ப்பில் போலிகளைக் கண்டறிய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: சிறப்பாசிரியர்கள் பணிநியமன சான்றிதழ் சரிபார்ப்பில் போலிகளைக் கண்டறிய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர்.
இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின்படி, உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 13-ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் சார்பில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
இது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ., ராஜ்குமார் கூறுகையில், "தனக்கு சிறப்பாசிரியர் பணி இடத்திற்கு உண்டான கல்வி தகுதி இருப்பது போல, உண்மைக்கு மாறான தகவல் கொடுத்துள்ளவர்கள் பெயர் சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் இடம் பெற்றுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. அரசு தொழில்நுட்பத் தேர்வு மட்டுமே எழுதியவர் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணைப்படி, (TECHNICAL TEACHER CERTIFICATE) ஆசிரியர் தொழில்நுட்ப சான்றிதழ் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்து போட்டித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்கள் இனம் கண்டு போலியான தேர்வர்களை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் மீதான நம்பகத்தன்மைக்கு குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்," என்றார்.