கோவை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் இருந்து இயக்கப்படும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையில் இருந்து இயக்கப்படும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வந்தாலும், பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முன்னெச்சச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கோவையில் பேருந்துகள் இயக்கம் குறைவாக இயக்கப்படுகிறது.
இதனிடையே, கன்னியகுமாரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர், இறச்சகுளம், வட்டக்கரையில் 3 அரசு பேருந்துகள் மீது கல்வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான கன்னியாகுமரின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.