தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது வெடித்தக் கலவரத்தி பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது வெடித்தக் கலவரத்தி பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று 99-வது நாளை எட்டியது. இந்த நிலையில், இன்று 100-வது நாள் போராட்டம் நடக்கிறது. இதையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் இன்று 100-வது நாள் பேரணியாக சென்றனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசாரின் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் கலகக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகையிட முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் தடியடியும் நடத்தப்பட்டது. இதனையும் மீறி ஒரு தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கலவரத்தில் பெண் உள்பட என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டுகளையும் வீசியதால், போராட்டக்களம், போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, தூத்துக்குடி கலவரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி, உள்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக டிஜிபி ராஜேந்திரன் கூறியதாவது :- தூத்துக்குடியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.