கோவை: நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை: நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை அம்மாநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கோவை அரசு மருத்துவமனையில் நிபா சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:-
நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருபவர்களுக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 படுக்கைகள் கொண்ட இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் கூட இக்காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அதிகளவிலான மக்கள் சென்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நிபா காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து எச்சரிக்கையாக நோயாளிகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனையை உடனடியாக நாட வேண்டும். இக்காய்ச்சல் எளிதில் பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வவ்வால்கள் மூலமாக இக்காய்ச்சல் பரவும் என்பதால் பறவைகள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.