மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பதினான்காம் நூற்றாண்டு நடுக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளதால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பெள்ளாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பண்டைய தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பதினான்காம் நூற்றாண்டு நடுக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளதால், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பெள்ளாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டைய கொங்கு மண்டலத்தில் நாடு என்ற அரசியல் பூகோளப்பிரிவுகள் கி.பி 12-ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் தான் முதன் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டு பிரிவிற்கும் ஒரு தலைவன் நியமிக்கப்பட்டு அவர்கள் சாமந்து, நாட்டு சாமந்தன், நாட்டுக்கருமம், ஆராய்வார் போன்ற பெயர்களில் குறிக்கப்பட்டனர். கி.பி 14-நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டு பிரிவையும் நிர்வகிக்க நாட்டு சபைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளாள நாடு, பூலுவ நாடு ஆகிய இருவகை சமுதாய சபைகள் கொங்கு மண்டலத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்துள்ளன.
இக்காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாக பட்டிணமாக தற்போதைய பெள்ளாதி கிராமம் திகழ்ந்துள்ளது. இங்கு காணப்படும் நடுக்கற்கள் மற்றும் அதில் உள்ள பழந்தமிழ் எழுத்து குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ் பெண் ஒருவர் புலி போன்ற பெரிய காட்டு விலங்குடன் கைகளில் வாள் ஏந்தி போரிட்டு கொல்வது போன்றும், ஆண் ஒருவர் தன்னை நோக்கி பாயும் காட்டுப்பன்றியை வாளால் தாக்கி கொல்வது போன்றும் வீர நடுக்கற்கள் காணப்படுகின்றன.
இந்த புடைப்பு சிற்பங்களில் அடியில் பதினான்காம் நூற்றாண்டு பழந்தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டு, அதில் ஊரையும், விவசாயத்தையும் காக்க போரிட்டவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும், இப்பகுதி நாட்டுப்பிரிவு தலைவர்கள் சமூக ஒற்றுமையுடன் இருப்பதை சுட்டிக்காட்டும் நடுக்கல், பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஜீவ சமாதி, பெரும் மலைப்பாறைகளில் செதுக்கப்பட்ட ஐந்து தலை நாகம் உள்ளிட்ட பல்வேறு பழமையான சிற்பங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
இங்கு திப்பு சுல்தானின் பீரங்கி படை தங்கியிருந்து போரிட்டதற்கான பீரங்கி திட்டு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு மேடை போன்றவையும் உள்ளன. முட்புதர்களுக்குள் மறைந்து கிடந்த சில பழமையான சின்னங்களை மட்டுமே தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தின் முதல் நிர்வாக பட்டிணமாக செயல்பட்ட பெள்ளாதி கிராமத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால், மேலும் பல வரலாற்று குறிப்புகள் மற்றும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் கண்டறியலாம் என்கின்றனர் பெள்ளாதி கிராம மக்கள்.
Video: Senthil