கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் மாசுபடுத்தப்படுவதை தடுக்கக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகும் நொய்யல், அம்பராம்பாளையம் உள்ளிட்ட ஆறுகளில் தொடர்ந்து சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால், அதனை குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீர், நிலம், காற்று உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை மீட்கக் கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் நீரை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் கழிவுகள் மற்றும் மாசுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வியாதிகளில் இருந்து மக்களை காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அக்கட்சியினர் மனு அளிக்கச் சென்றனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் மனுவின் சாராம்சம் குறித்து கேட்காமல் உதாசீனப்படுத்தும் வகையில் மனுவை வாங்கிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
