கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று கோவையில் நடத்திய சோதனையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கார்பைடு கல் வைத்து செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால், லாப நோக்கில் சில வியாபாரிகள் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உக்கடம் பகுதியில் இன்று 16 பழக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். இதில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு பழக்கடையில் மட்டும் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

கோவையில் மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழ வரத்து அதிகரிக்கும் நேரத்தில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்படும். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.