அழிந்து வரும் சிலம்பாட்டத்தை காக்கும் 76 வயது இளைஞர்

கோவை மாவட்டம் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியில் 52 வருடங்களாக வீரமாருதி உடற்பயிற்சி சாலையின் மூலம் மாணவ/மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்து வருகிறார் சந்திரன் ஆசான்.


கோவை: அழிந்துவரும் கலையை பாதுகாக்கும் வகையிலும், தற்காப்பு கலைக் கற்றுக் கொடுக்கும் விதமாகவும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பாட்டத்தை கோவையைச் சேர்ந்த சந்திரன் ஆசான் கற்றுக் கொடுத்து வருகிறார். யோகா நானாம்மாளைத் தொடர்ந்து, சந்திரன் ஆசான் போன்ற மூத்தோர்கள் பாரம்பரிய கலைகளை தற்போதைய சந்ததியினருக்கு பயிற்று வித்து தருவது ஆச்சர்யமே..,



கோவை மாவட்டம் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள பெருமாள்கோவில் வீதியில் 52 வருடங்களாக வீரமாருதி உடற்பயிற்சி சாலையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பாட்டம் கற்றுக்கொடுத்து வருகிறார் சந்திரன் ஆசான். 76 வயதான இவர் 11 வயது முதல் தொடர்ந்து 9 ஆண்டுகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் அதன் உட்பிரிவுகளான குறுவடி, நெற்கம்பு, களரி, கைப்போர், வாள், ஈட்டி, கேடயம், குத்துவாள், வீச்சுவாள், வெட்டுவாள், சிறுத்தகுச்சி, காட்டகுஸ்தி என 13 வகையான கலைகள் கற்றுக்கொண்டார். 

இந்த வயதிலும் சிலம்பாட்ட கோதாவில் இறங்கி சண்டையிடுகிறார். 20 பேர் சுற்றி வளைத்து சிலம்ப கம்புகளை கொண்டு சண்டையிட்டாலும் அசராமல் 20 வயது இளைஞனை போன்று அனைவரையும் வீழ்த்திவிடுகிறார். தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடாமலிருக்க 1964 ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்துவருகிறார். இவரிடம் பயிற்சி பெரும் மாணவ, மாணவிகள் மாவட்டம், மாநிலம், தேசம், சர்வதேசம் என சிலம்பாட்ட போட்டிகளில் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று குவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் 27 ஆசிய நாடுகள் பங்குபெற்ற “உலக சிலம்பாட்ட அமைப்பு “ மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் இவரது மாணவர்கள் 6 பேர் இந்தியா சார்பில் கலந்துகொண்டு 8 தங்கங்கள் உட்பட 36 பதகங்களை வென்று முதலிடம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். 

இவரது சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக கடந்த 2016-ம் ஆண்டு 'கலை முதுமணி' விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை சிலம்பம் சங்கம் சார்பாக “சிறந்த ஆசான்”, லயன்ஸ் கிளப் மற்றும் சிலம்பாலயம் அமைப்பு சார்பாக “ வாழ்நாள் சாதனையாளர்”, நாமக்கல் சிலம்பாட்ட சங்கம் சார்பாக “வாழ்நாள் அர்ப்பணிப்பாளர்” ,ஜெய்வர்மா அறக்கட்டளை சார்பாக“ சிலம்பாட்டத்தில் தலைசிறந்தவர்” போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து கலைமுதுமணி சந்திரன் ஆசான் கூறுகையில் ”இந்த சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள வரும் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வசதி குறைவானவர்கள். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியாத சூழ்நிலை தான் உள்ளது. அவர்களுக்கு தமிழக அரசால் ஊக்க தொகை அளிக்க வேண்டும். சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட, மாநில அளவிலான நடத்தப்படும் போது அனுபவமில்லாத நடுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால், பல திறமைமிக்க மாணவர்கள் நடுவர்களின் தவறான தீர்ப்பால் பாதிக்கப்படுகிறார்கள். சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை கொண்டு அரசாங்க வேலைகளில் முன்னுரிமை தர வேண்டும். இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

இதுபோன்ற சிலம்பாட்ட பயிற்சி பெறும் மாணவர்கள், நல்லொழுக்கம், உடல் மற்றும் மனவலிமை பெற்று எந்த சூழ்நிலையிலும் தெளிவான சிந்தனையுடன் முடிவு எடுக்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். 

இது குறித்து வீரமாருதி உடற்பயிற்சி சாலை மாணவர் சதீஸ் “ 17 வருடங்களாக சிலம்பம் கற்று வருகிறேன். சந்திரன் ஐயாவின் நிமிர்ந்த நடை, கம்பீரம் போன்றவை பெரிதும் என்னை ஈர்த்தது அதன் காரணமாக தான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். இதனால், உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த மனிதாக இருக்கிறேன். ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த நான் சிலம்பம் கற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் உலகளவில் அங்கிகாரம் கிடைத்துள்ளது.'' என்றார்.



பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நாட்களில் தற்காப்பு கலைகள் என்பது மிகவும் அவசியம். சிலம்பம் கற்கும் பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள உதவுகிறது. எதிரிகளை நொடியில் வீழ்த்தி தப்பித்துக் கொள்ள முடியும். 

இது குறித்து வீரமாருதி உடற்பயிற்சி சாலை மாணவி தீபிகா “ எனக்கான பாதுகாப்பை என்னால் உறுதி செய்ய முடிகிறது. தற்காப்புக் கலைகளில் சிறந்த கலை சிலம்பம் தான் பாரம்பரிய மிக்க இந்தக் கலையை நான் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், மேலும் 10 மாணவிகளுக்காவது இதனைக் கற்றுக்கொடுப்பேன். பெண்கள் அனைவரும் சிலம்பம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

உலகின் மிகவும் பழமையான கலையாக தமிழர்களின் சிலம்பாட்டம் கருதப்படுகிறது. அந்த கலையினை மாணவ,மாணவிகள் மத்தியில் ஊக்குவித்து அழியாமல் பாதுகாத்து கொள்ள தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...