மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை : மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மனைவி பேச்சியம்மாள்.
இந்த தம்பதியினருக்கு சித்ராதேவி (14) என்ற மகள் உள்ளார். இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்த நிலையில், நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன் (23) என்பவர் சித்ராதேவி-யை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று பள்ளி மாணவியிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு சித்ராதேவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் பாலமுருகன் ஆத்திரமடைந்தார்.
தொடர்ந்து, இன்று மாலை பள்ளி முடிந்து மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் தன்னிடம் இருந்த 2 லிட்டர் பெட்ரோலை மாணவியின் உடல் மீது ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடி பாலமுருகனை தேடி வருகின்றனர்.
காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.