தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 22
தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த சகோதரி நிவேதிதை 150-வது பிறந்தநாள் ரத யாத்திரை நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு. கொஞ்சம் கொஞ்சமாக கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். பேருந்து கட்டணம் என்ற பெயரில் மக்கள் மீது தற்போது சுமையைச் சுமத்தி இருக்கின்றனர். பேருந்து கட்டணம் குறித்த தன்னுடைய கருத்து ஒவ்வொரு பத்திரிகையிலும், ஒவ்வொரு மாதிரி வந்திருக்கின்றது. தமிழகத்தில் பா.ஜ.க-வினரிடம் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை, வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ஆன்மீக பெரியவர்கள் வேதனையுடன் போராடிக்கொண்டு இருக்கின்றனர். ஆண்டாள் விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை. ஆன்மீக பெரியவர்களிடம் இருக்கின்றது. ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றே ஆன்மீக பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆண்டாளை தாய் என்று சொல்லும் வைரமுத்து, தாயிடம் மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன்..?.
காவி உடை தரித்து பேசுபவர்கள் அனைவரும் ஆன்மீகவாதிகள் அல்ல. காவி உடை போட்டு அசிங்கமாக பேசுபவர்களை பற்றி கவலைப்பட நான் சாமியார் இல்லை. ஆன்மீகவாதிகள் அதைப் பற்றி கவலைப்படுவார்கள். என்றார்.
தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பொதுவெளியில் தகாத முறையில் பேசுவது குறித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், சில உணர்வுகளை தட்டி எழுப்பி பேசுவது தன்னையும் மீறி வரக்கூடிய விஷயம். தன்னையும் மீறி வரக்கூடிய விஷயங்களுக்கு அவர் பொறுப்பாக முடியாது.
அவினாசி - அத்திகடவு திட்டம் தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளால் மேற்கு மாவட்ட மக்கள் தொடந்து ஏமாற்றப்படுகின்றனர். மத்திய அரசு உதவி செய்ய தயாராகவே இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து விதைகள், செடிகள் கொண்டு வரும் போது துறைமுகங்களில் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த, ஆய்வகங்களை அதிகப்படுத்துவது தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். விமான கட்டணம், தனியார் பேருந்து கட்டணங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தப்பட வேண்டும். எனக் கூறினார்.
தேசிய கட்சிகள் நோட்டாவிற்கு கீழே இருக்கும் என்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. முதல்நிலை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.