ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஜனவரி 18
ஆவின் பாலகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அப்புறப்படுத்துவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை முன்பாக உள்ள இரண்டு ஆவின் தேநீர் கடையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் அதிமுக-வின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தினகரன் ஆதரவாளருமான அன்னம்மாவிற்கு சொந்தமான கடையை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னம்மாள் மற்றும் தினகரன் அணியினர் ஆவின் கடை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அன்னம்மாள் கூறுகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கடையை அப்புறப்படுத்த விடமாட்டோம் என்றார்.
இதனிடையே, தினகரன் ஆதரவாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.