கோவை, ஜனவரி 12
விதிமுறைக்கு உட்பட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணபித்து உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கபடும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடன் கொடுக்கும் திட்டங்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், கோவை காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டதால் 45 சதவீத போக்குவரத்து நெரிசல் குறைந்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காந்திபுரம் பேருந்து நிலையம் வெள்ளலூர் கொண்டு செல்லபட்டு அங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்கான நிதிக்காக காத்திருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும், சட்டமாக அறிவிக்கும் முன்னர் யாரும் இது குறித்து பேசவில்லை எனவும் அறிவித்த பின்னர் பேசுகின்றனர் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.
ஊதியம் போதாமல் இருப்பதால் எம்எல்ஏ க்கள் இயங்குவதில் சிரமமாக இருக்கின்றது என்றும் அவர்கள் கேட்டதால் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கு ஆண்டிற்கு 25 கோடி மட்டும் செலவாகும் எனவும் தெரிவித்தார். எம்எல்.ஏ சம்பள உயர்வை வைத்து திமுகவினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய அவர், சம்பள உயர்வில் விருப்பம் இல்லாத சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு அதை அளித்து விடலாம் என்று கூறினார்..
சாலைகளை தோண்டாமல் குடிநீர் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சாலையை சேதப்படுத்தி, சாலைகளின் குறுக்கே குழி தோண்டினால் ஓப்பந்ததாரர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மகளிர் கடன், மானியம் வழங்குவது, மானியமில்லா கடன், குறுகிய கால கடன் திட்டம் போன்றவை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் கடன் வழங்குவது குறித்து ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்த அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.