சாரணர்- சாரணியர் இயக்கத் தலைவருக்கான தேர்தல் சென்னையில் இன்று (16.09.2017) நடைபெற்றது. சாரணர் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் தலைவர், 3 துணைத் தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரே வாக்களிக்க தகுதியானவர்கள்.
அதன்படி, இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் உறுப்பினர்கள் அனைவரும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி அறிவித்தார். சாரண, சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில் 234 வாக்குகள் பெற்று கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி வெற்றி பெற்றார். எச்.ராஜா 46 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தார்.
மேலும் அவர் கூறியதாவது:- வாக்களிக்க தகுதி உள்ள 499 பேரில் 286 பேர் வாக்களித்தனர். 2 வாக்குகள் செல்லாதவை. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம். முறைகேடு நடந்திருப்பின் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்து இருக்கத் தேவையில்லை. தேர்தல் முறையாக நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சாரண சாரணியர் அமைப்பின் துணை தலைவர் தேர்தலில் மணி, ரங்கநாதன் மற்றும் பெரியண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.