கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இரண்டு சிறுவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று (16.09.2017) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:-

சிலருக்கு குழந்தை பருவத்திலேயே மூட்டுகள் வீங்கி காய்ச்சல் ஏற்படும். இதனால், இருதயத்திற்கு செல்லும் குழாய்கள் பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் போன்ற சிரமங்கள் ஏற்படும்.
இப்படிப்பட்ட சிரமங்களுடன் இருந்த தேவராஜ் (13) என்பவருக்கும், கனகராஜ் (27) என்பவருக்கும் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய குழாய் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் சீனிவாசன், முகமது முன்னத்துல்லாஹ், பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இது போன்ற நவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.