ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும். 5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம். ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா?.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய அமைப்பினர் ஒன்றும் சுப்ரீம் பவர் இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா?. போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்.,18 ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.