கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்ட 193 பேருக்கு பாராட்டு வழங்கினார். டெங்கு தடுப்பு போட்டியில் 11.84 லட்சம் களன்களை அகற்றிய கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றது.


Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 48 பேருக்கு தலா ரூ.2,000 வெகுமதியுடன் பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 132 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவியர்களுக்கும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 5 மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 193 பேர் பாராட்டப்பட்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற Dengue Prevention League போட்டியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11,84,259 களன்களை சேகரித்து அகற்றிய கிழக்கு மண்டலம் முதலிடம் பிடித்தது. அந்த மண்டலத்திற்கு மேயர் வெற்றிக் கோப்பையை வழங்கினார். மேற்கு மண்டலத்திற்கு இரண்டாம் பரிசுக்கான கோப்பையும் வழங்கப்பட்டது.



2024-25 முதல் 2026-27 வரையிலான அரையாண்டு சொத்து வரியை நிலுவை மற்றும் அபராதம் இல்லாமல் முறையாக செலுத்திய தி யுனைடெட் நீலகிரி டீ எஸ்டேட் லிமிடெட், எஸ்.எம்.டபிள்யூ லிமிடெட், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (டி-மார்ட்), ராம்குமார் கிரி மற்றும் சுகுணா பொறியியல் கல்லூரி ஆகியோருக்கும் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



விழாவுக்கு முன்னதாக செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உருவாக்கிய சோலார் சிஸ்டம், ராக்கெட் மாடல், மூன் காலனி, வாட்டர் ராக்கெட் உள்ளிட்ட 13 வகையான அறிவியல் கண்காட்சிகளை மேயர் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார்.

தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதி இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் NCC மற்றும் BAND நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, நிதிக்குழுத் தலைவர் வி.ப.முபசீரா, கணக்குகள் குழுத் தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்புக் குழுத் தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் சா.குமார ராஜபாண்டியன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சுபாஷ்காந்தி, நகரமைப்பு அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...