மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுத்து வரும் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 17 வயது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகக் கூறி மிரட்டி, ரூ.8.65 லட்சம் பறித்ததாக குற்றம்சாட்டி, அப்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தங்களது வீட்டின் அருகே அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வந்த துஷரா என்பவர் தங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது 17 வயது மகளுடன் ‘கார்த்திக்’ என்பவர் தொடர்பில் இருப்பதாகவும், அவரிடம் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை நீக்க ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என துஷரா தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் பெற்றும், கூகுள் பே மற்றும் ரொக்கமாக பல தவணைகளில் மொத்தம் ரூ.8.65 லட்சம் வழங்கியதாகவும், அந்த தொகை துஷரா மற்றும் அவர் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் ‘கார்த்திக்’ என்பவரிடம் கொடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், துஷரா பொய்யான தகவல்களை கூறி பணம் பறித்தது தெரியவந்ததாகவும், பணத்தை திரும்பக் கேட்டபோதும், காவல்துறையில் புகார் அளிக்க முயன்றபோதும், துஷரா மற்றும் கார்த்திக் இருவரும் தொடர்ந்து மிரட்டியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாத சிலரை வைத்து தங்களது குடும்பத்தினரின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே சென்றாலோ, வழக்கறிஞர் அல்லது காவல்துறை அதிகாரிகளை சந்திக்கச் சென்றாலோ, தங்களை பின்தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை வெளியில் தெரிவித்தாலோ அல்லது காவல்துறையில் புகார் அளித்தாலோ, குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்றும், தன்னையும் தனது குழந்தைகளையும் உயிருடன் விடமாட்டோம் என்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடுவோம் என மிரட்டியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் 26-ஆம் தேதி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, புகாரை ஏற்க மறுத்ததாகவும், பின்னர் ஜூன் 29-ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆன்லைன் மூலம் புகார் அளித்ததற்கான ரசீது வழங்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணையோ நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, துஷரா, ‘கார்த்திக்’ எனக் கூறப்படும் நபர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது குடும்பத்தினருக்கு காவல் பாதுகாப்பு வழங்குவதுடன், மிரட்டி பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.65 லட்சத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...