அண்ணாமலையும், முருகனும் உங்கள் குரலை நேரடியாக என்னிடம் எதிரொலிப்பார்கள் - மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பேச்சு..!

ஊழல் தான் தி.மு.க., மற்றும் காங்கிரசின் ஒரே குறிக்கோள். ஊழல்வாதிகளை அகற்றுவோம், தண்டிப்போம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால், ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம், என அவர்கள் சொல்கிறார்கள் என்று பிரதமர் மோடி சாடினார்.



கோவை: கோவை, நீலகிரி, பொள்ளாச்சி மற்றும் திருப்பூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, மேட்டுப்பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.



அப்போது பேசிய பிரதமர் மோடி,



கோவையில் மருதமலை முருகனையும், கோனியம்மனையும் வணங்குகிறேன். இவ்வளவு அழகான தேயிலை தோட்டம் உள்ள பகுதிக்கு வந்தால் ஒரு டீக் கடைக்காரருக்கு சந்தோஷமாக இருக்காதா என்ன..? 

தமிழ்ப் புத்தாண்டை கொண்டாட இருக்கிறீர்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சியின் போது நீலகிரியில் இருந்து பா.ஜ.கசார்பில் ஒருவரை தேர்வு செய்து அனுப்பினீர்கள். 

தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.க - வின் ஆதிக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. தி.மு.க - வுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் உத்வேகத்தை பா.ஜ.க - வால் மட்டுமே கொடுக்க முடியும் என தமிழகமே சொல்கிறது.

தி.மு.க., காங்கிரஸ் ஆகிய வம்சாவளி பரம்பரைக் கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது பொய் சொல்லி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது தான். இவர்கள் வறுமையை ஒழிப்போம் என அடிக்கடி சொல்கிறார்கள். இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் ஏன் வறுமை நீக்கவில்லை..? 



காங்கிரஸ், தி.மு.க - வின் இந்தியா கூட்டணி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் செய்த வேலை, 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது தான். 

இங்கு உள்ள கோடிக்கணக்கான ஏழைகள், பட்டியலின மக்களுக்குக் வீடு,மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு இவை எல்லாம் கிடைத்து விடக் கூடாது என்பது தான் இவர்களின் எண்ணம். பா.ஜ.க அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு வீடும், இலவசமாக ரேஷனும் கொடுத்தது. இதை வாங்கியவர்கள் எல்லாம் ஏழை, எளிய மக்கள் தான். 

இந்தக் கட்சிகள், 'தங்களின் பேரன், பேத்திகள் ஆட்சிக்கு வர வேண்டும்' என நினைக்கின்றனர். பட்டியல் இன மக்களோ, ஏழை மக்களோ ஆட்சிக்கு வருவதை இவர்கள் விரும்புவதில்லை. பட்டியல் இன பெண்ணை ஜனாபதியாக கொண்டு வந்தது பா.ஜ.க, அதற்குக் கூட ஆதரவு தராமல் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனா தொற்று காலத்தில், 'இந்தியாவிலேயே மருந்து தயாரிப்போம்' எனக் கூறியதை எள்ளி நகையாடினார்கள். ஆனால், இந்தியாவிலேயே மருந்து தயாரிப்போம் என்று இந்தியா கூட்டணிக்கு சவால் விடுத்தோம். பல உலக நாடுகளுக்கும் மருந்து கொடுத்ததால், கோடிக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.



இந்தியா கூட்டணியினர் தொற்று நோயை மட்டும் எள்ளி நகையாடவில்லை. 'இந்தியாவின் பொருளாதாமும் சீர்குலைந்து விடும்' என ஆரூடம் சொன்னார்கள். ஆனால், சிறு - குறு தொழில் நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி நிதியை பா.ஜ.க அரசு கொடுத்தது. அதனால் தான் கோவையில் ஆயிரக் கணக்கான சிறு - குறு நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன. லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 

தி.மு.க., அரசு மக்கள் சக்தியை வீணடித்துக் கொண்டு இருக்கிறது. ஜவுளி தொழிலை காப்பாற்றுவதற்குப் பதிலாக அதிகப்படியான மின் கட்டணத்தை உயர்த்தி, அத்துறையை நலிவடைய வைத்து உள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை மக்கள் மீது திணிக்கிறார்கள்.

இன்று நம் நாடு 'மேக் இன் இந்தியா' என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்த முதலீடுகளை முடக்க நினைக்கிறது தி.மு.க அரசு. இவர்கள் தங்களின் சுய லாபத்துக்காக அதிகபட்ச கேடுகளை விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரசின் இந்தியா கூட்டணி பாரபட்சம், பிரிவினைவாதம் என்ற ஆபத்தான விளையாட்டை ஆடிக் கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் தி.மு.க இதே விளையாட்டை தொடர்கிறது.

கோவையில் பாதுகாப்பு வழித் தடத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. இதையெல்லாம் இந்தியா கூட்டணி செய்யுமா ? யாராவது முதலீடு செய்ய வருவார்களா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யார் ஆட்சியாக இருந்தாலும் அம்மாநிலத்தின் உயர்வுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது.  தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்துள்ளது. 

கோவை உள்பட தமிழகத்தின் 2 முக்கிய நகரங்களில் மாதிரி தளவாட பட்டறை பூங்காங்களை தமிழகத்துக்கு கொடுத்து உள்ளோம். 'வந்தே பாரத்' என்ற சிறப்பு வாய்ந்த ரயில்கள் கோவைக்கு வருகிறது. கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது.

"ஜல் ஜீவன் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ் வீடுகளைத் தேடி தண்ணீர் கொடுக்கிறோம். தமிழகத்திலும் கோடிக் கணக்கான இணைப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால், தி.மு.க வோ, தங்கள் கட்சிக்காரர்களைத் தேடித் தேடி குடிநீர் இணைப்பை கொடுக்கிறது.இன்றும் கோவையில் 15 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. 

தி.மு.க வெறுப்பு அரசியலைத் தான் செய்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியின் மீது அவர்களுக்கு கவனம் இல்லை. தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணியினரும் வெறுப்பு அரசியலைத் தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. மீண்டும், என்.டி.ஏ மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் போது கோவை, நீலகிரியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமாக செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறேன். 

கோவையில் புனிதமான சங்கமேஸ்வரர் கோயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய மாநில அரசு, அதற்குப் பதிலாக அந்த தீவிரவாதிகளை காப்பாற்றும் வேலைகளைச் செய்தது.

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டது. பிராண பிரதிஷ்டையை இந்தியா  கூட்டணி  எதிர்த்தது. தமிழகத்தில் ராமர் தொடர்புடைய புண்ணிய தளங்களுக்கு சென்றேன். தி.மு.,க - வுக்கு அதில் விருப்பமில்லை. 'சனாதனத்தை ஒழிப்போம்' என்கின்றனர்.

பார்லிமென்டில் தமிழகத்தின் செங்கோலை வைக்க முயன்ற போது, அதை தி.மு.க புறக்கணித்தது. சுரண்டலுக்கும்,  ஊழலுக்கும் இன்னொரு பெயர் தான் தி.மு.க. இன்று மொபைல் சேவையில் 5 ஜி என உலக சாதனை படைக்கிறோம். ஆனால், 2 ஜியில் ஊழல் செய்து நாட்டையே தி.மு.க அவமானப்படுத்தியது.

ஊழல் தான் தி.மு.க மற்றும் காங்கிரசின் குறிக்கோள். 'ஊழல்வாதிகளை அகற்றுவோம், தண்டிப்போம்' என்கிறேன். 'ஊழல்வாதிகளை காப்பாற்றுவோம்' என அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு முக்கிய உதாரணம் சொல்கிறேன். காங்கிரசும் தி.மு..க-வும் உயிரோட்டமான ஒரு பகுதியை வேறு நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்ததைப் பற்றிய அரசு ஆவணம் சமீபத்தில் வெளியானது.

இந்தியாவின் இறையாண்மையை சேதப்படுத்தியதற்கான விலையை தமிழக மீனவர்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த பாவங்களுக்கு மக்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்.

தி.மு.க எப்போதும் அதிகார ஆணவத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது. அண்ணாமலையை பற்றி தி.மு.க தலைவர் ஒருவரிடம் கேட்ட போது, 'யார் இந்த அண்ணாமலை?' என்கிறார். அந்தளவுக்கு ஆணவம் அவர்களின் கண்களை மறைக்கிறது. அதை தமிழகம் என்றும் அனுமதிக்காது. தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரானது அந்த ஆணவம். ஒரு முன்னாள் காவல் அதிகாரி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், அவரைத் தெரியவில்லையாம். இது தான் அவர்களின் குணம். 

குடும்ப அரசியல் செய்து வருகிறவர்களுக்கு ஓர் இளைஞன் நேர்மையாக அரசியல் செய்ய வருவதே பிடிக்கவில்லை என்பது தான் இதன் பொருள்.

'மோடியை பாரதத்தை விட்டு வெளியேற்றும் தேர்தல்' என்கிறார்கள். அவருக்கும் அவர் கட்சிக்கும் ஒன்றை சொல்கிறேன், ஊழலை இந்தியாவை விட்டே அகற்றும் தேர்தல் இது. உங்கள் வம்சாவளி அரசியலையும் போதைப் பொருள் கடத்தலையும் தேசத்துக்கு எதிரான கொள்கை விரேதப் போக்குகளையும் விரட்டும் தேர்தல் இது.

அண்ணாமலையும், முருகனும் உங்கள் குரலை நேரடியாக டில்லியில் வந்து என்னிடம் எதிரொலிப்பார்கள். பா.ஜ.க வேட்பாளர்களின் வெற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதையை திறக்கப் போகிறது. இது மோடியின் உத்தரவாதம். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...