கோவையில் வேட்பு மனு தாக்கலின் போது ஏற்பட்ட சலசலப்புக்கு போலீசார் தான் காரணம் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி

நா.த.க வின் ஊர்வலத்திற்கும், கூட்டத்திற்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது, வாகன பேரணியை, போலீசார் தடுத்து நிறுத்தியதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார். 



கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.25) வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.



வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நாளை முதல் எங்களது தேர்தல் பிரச்சாரங்களை துவங்க உள்ளோம். காலையில் வேட்பு மனு தாக்கலுக்காக வாகனங்களில் ஊர்வலமாக வரும் போது காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

மற்ற கட்சிகள் வரும்போது போலீசார் இப்படி தடுப்பதில்லை. குறிப்பாக மோடி கோவை வந்தபோது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாங்கள் ஓரமாகப் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வந்து கொண்டிருந்தோம், போலீசார் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்தினர்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு போலீசார் தான் காரணம். நாளை பாஜகவின் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய இப்படி வரும்போதும் போலீசார் இப்படித்தான் நடவடிக்கை எடுப்பார்களா என பார்க்கலாம். மற்ற கட்சிகள் என்ன செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, தமிழகத்தின் மூன்றாவது கட்சியான நாம் தமிழர் கட்சி ஊர்வலத்திற்கும் கூட்டத்திற்கும் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறைக்காகவும் பொது மக்களுக்காகவும் தான் நாங்கள் போராடுகிறோம்.

அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் உரிமைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் உரிமைகளை போராடி வாங்கி வருகிறோம். என்.ஐ.ஏ சோதனை, சின்னம் வழங்காதது, இவை அனைத்துமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். மக்களுக்கு இது தெரியும்' என தெரிவித்தார்.

கட்சி சின்னம் பெறுவதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காத நீங்கள் மக்கள் பிரச்சனைக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சிறிய தடுமாற்றத்திற்குப் பின்னர் பதில் அளித்தவர், சின்னமே இல்லை என்றாலும் எங்களால் வேட்பு மனு தாக்கல் செய்து, எந்த சின்னத்தையும் இந்தியா முழுவதும் பரப்பும் அளவிற்கு எங்களது ஐடி பிரிவு உள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சுரேஷ் குமார், ஒரு அரசியல் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இரண்டு நாட்களில் எங்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். அதுவரை மற்ற யுத்திகளில் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். சின்னம் கிடைத்தவுடன் மக்களிடம் கொண்டு செல்வதற்கு எங்களது ஐடி பிரிவின் மூலம் வேலை செய்வோம்.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் மாநில சுய உரிமைகளை இழந்துள்ளோம், அதிக அடக்குமுறைகள், மதப் பிரச்சினைகள் நடந்துள்ளது. மக்களை மத ரீதியாக பிரித்து ஆளக்கூடிய சூழ்ச்சி பத்தாண்டுகளாக உள்ளது. அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்கள் தான் இருந்தது.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலை நிறுத்த எந்த கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிட்டு உறுதியாக நிற்கிறோம்' என்றார்.

150 வாகனத்திற்கும் அனுமதி காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த கலாமணி, ஊர்வலத்திற்கு அனுமதி உண்டு என கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பதில்லை. இதே கேள்வியை மற்ற கட்சிகளிடம் கேளுங்கள். பாஜக, அதிமுக யார் வந்தாலும் எதுவும் கேட்பதில்லை. பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம் தேர்தல் பத்திரம் குறித்து கேள்வி கேளுங்கள் என காட்டமாக பேசினார்.

மேலும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவையின் சிறு குறு தொழில்கள் முடங்கியதற்கு காரணம் ஜிஎஸ்டியும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் தான். இங்கு பெரும்பாலும் வட தமிழர்கள் வேலையில் உள்ளனர். தமிழர்களுக்கு வேலையில்லை. படித்த பட்டதாரிகளுக்கு இங்கு வேலை வாய்ப்பில்லை. இவற்றையெல்லாம் சரி செய்யும் முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்.

மற்ற கட்சிகளைப் போல பொய்யான வாக்குறுதிகள் நாங்கள் கொடுப்பதில்லை. அதிகாரம் கிடைத்ததும் அனைத்து மக்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். அதை எங்களது செயலில் நீங்கள் பார்ப்பீர்கள் எனவும், பெண் வேட்பாளராக இருக்கும் சவால்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், 'பிரபாகரன் பிள்ளைகளாகிய எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆணும், பெண்ணும் சமம் என நாங்கள் கருதுகிறோம். அதனால் 20 தொகுதியில் ஆண்களும் 20 தொகுதிகள் பெண் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளோம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...