பெரியநாயக்கன்பாளையம் அருகே மலைப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்திற்கு வந்த மானை, நாய்கள் துரத்தியதால், தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மான் புகுந்துள்ளது. மானை மீட்டு வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயிடம் தப்பிய மானை, வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்டவைகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த விலங்குகள் அவ்வப்பொது உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வந்து விடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகளை வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்குட்பட்ட மலைப்பகுதியில் இருந்து ஒரு மான் வழி தெரியாமல் மலை அடிவாரத்திற்கு வந்துள்ளது.
அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த மானை துரத்த மான் தப்பிப்பதற்காக தெற்குப்பாளையம் பகுதிக்குள் உள்ள ஒர் வீட்டின் புகுந்துள்ளது. அதன்பிறகு அதனால் வெளியே வரமுடியவில்லை.
அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து மானை துரத்தி வந்த நாயை விரட்டினர். தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த மானை பாதுகாப்பாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.
அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் மானை வீடியோ எடுத்து சமூக வலைப்பக்கங்களில் பரப்பியுள்ளனர். அது தற்போது வைரலாகியுள்ளது.