விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வுகள் இல்லை..! - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வார்த்தை ஜாலங்களால், வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் பிரச்சினைக்கான தீர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வழக்கம்போல வார்த்தை ஜாலங்கள் நிரம்பியதாகவே உள்ளது. மானிய கோரிக்கையின் போது, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும், கொள்கை விளக்கக் குறிப்புகள், அறிவிப்புகளை, பட்ஜெட்டாக, வேளாண் அமைச்சர் வாசித்துள்ளார். பச்சை துண்டு அணிந்து கொண்டு பட்ஜெட் உரையாற்றியது. முதலமைச்சருக்கு, பூங்கொத்துக்குப் பதிலாக சிறுதானிய கதிர்களை பரிசளித்தது தவிர, பட்ஜெட்டில் புதுமை எதுவும் இல்லை.

பிரதமர் மோடியின் முயற்சியால், இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் வகையில் ரூ.82 கோடியில் சிறுதானிய இயக்கம், ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. இவை வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், முழுமையாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண பட்ஜெட்டில் எந்த தீர்வும் இல்லை.

விவசாயம் செய்யும் பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், பெரிய வெங்காயம், காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. விவசாயிகளின் வருமானம் அதிகரித்தால் தான் அவர்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

உற்பத்தி அதிகமாகும் போது, சேமித்து வைக்கவும், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்கு உருப்படியான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கினால், பல லட்சக்கணக்கான தென்னை விவசாயிகளின் துயர வாழ்வு முடிவுக்கு வரும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, இந்த கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார். இதனை சுட்டிக்காட்டி, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என, சட்டப்பேரவையிலும், வெளியிலும் பலமுறை வலியுறுத்தினேன். அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ரேஷன் கடைகளில் வழங்குவதாக அறிவித்துள்ள சிறு தானியங்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். நகர மயமாக்கலால் தமிழகத்தில் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக, கட்டிடங்களாக மாறி வருகின்றன. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவு கட்டாவிட்டால், வருங்காலத்தில் உணவு பொருட்கள் அனைத்திற்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த ஆபத்தை திமுக உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை. இதனை நிறைவேற்றினாலே, சரிபாதி விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால், பெயரளவுக்கு மட்டுமே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்வதில்லை. ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லை எடுப்பதில்லை என, விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கான தீர்வுகளும் பட்ஜெட்டில் இல்லை.

மொத்தத்தில் வார்த்தை ஜாலங்களால், வெற்று அறிவிப்புகளால் விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் வாங்கப் போனவருக்கு, கறிவேப்பிலை, கொத்துமல்லி மட்டுமே கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திமுக அரசின் வேளாண் பட்ஜெட்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...