கோவையில் ஒண்டிப்புதூர், கணபதி, உக்கடம் பகுதிகளில் நடந்து சென்ற இளைஞர்களிடம், அவர்களின் செல்போன்களை திருடிவிட்டு சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் செல்போன் பறிப்பு அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் பணம், பொருள் வழிப்பறி ஒருபுறம் நடந்துவரும் நிலையில், மறுபுறம் செல்போன் வழிப்பறி கொள்ளையும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக நடந்து செல்வோர், பைக்கில் செல்வோர், பேருந்தில் பயணிப்போர் என பலரையும் குறிவைத்து செல்போன் கொள்ளைகள் அதிகம் நடத்தப்பட்டுவருகிறது.
அதன் அடிப்படையில், கோவையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே வினோத் என்ற இளைஞர் செல்போனில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே பைக்கில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று, சின்னராஜ் என்பவர் தனது பணியை முடித்துவிட்டு கணபதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பல் அவரின் மேல்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை லாவகமாக பறித்துச்சென்றது. இதுகுறித்து சின்னராஜ் தந்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாண்டி என்ற நபர் தனது வாகனத்தை உக்கடம் பைபாஸ் சாலையில் நிறுத்தி வைத்து விட்டு சென்றிருக்கின்றார். வாகனத்தின் சீட்டு கவரில் தனது ஃபோனையும் வைத்துள்ளார். பின்னர் திரும்பிவந்து பார்த்த பொழுது அந்த செல்போன் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பஜார் காவல்நிலையத்தில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த செல்போன் பறிப்பு சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.