கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூரில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பூச்சியூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி அங்குள்ள 400 ஆண்டுகள் பழமையான வீரபத்திரசாமி, மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி, இறைவனை வழிபடுவர்.
இந்த நிகழ்வில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். அதே போல் இந்த ஆண்டும் வழக்கம் போல, சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் துவக்கமாக அதிகாலையில் மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தொடர்ந்து கோவில் பூசாரி வீரபத்திர சுவாமி முன்பாக கால்பாதங்களை நோக்கி கூர்மையான ஆணிகள் உடைய மரக்கட்டையால் ஆன காலணிகளை அணிந்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தார்.
வேட்டைக்காரசாமி ஊர்வலத்தின் போது, பூசாரி வரும் பாதையில், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற மனதில் வேண்டியபடி, தரையில் படுத்துக் கொள்வர். ஆணிக்காலணி அணிந்த பூசாரி நடந்து வருவார். பூசாரியின் காலடி பட்டால், கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பெண்களின் நம்பிக்கை.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனித உரிமை இயக்கம் மற்றும் பெண்ணுரிமை விழிப்புணர்வு சங்கத்தினர் இந்த வினோதமான வழிபாட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த 14 ஆண்டுகளாக முள் படுக்கை எனும் ஆணி காலணி அணிந்து, பூசாரி நடந்து செல்லும் போது பெண்கள் தரையில் படுத்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்ததின் காரணமாக யாரும் தரையில் படுப்பதில்லை.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கூறும்போது, கடந்த 400 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த திருவிழாவில் வேண்டுதலுக்காக நடைபெறும் இந்நிகழ்ச்சியை தடை செய்ததை விடுத்து பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.