நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை: கடந்த இரு தினங்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தற்போது வரை மூன்று நாட்களாக நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேரிடரைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தெற்கு மண்டலம் சார்பில் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை தெற்கு மண்டல தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் கரும்புக்கடை பகுதியில் மஸ்ஜிதுல் ஹூதா, மற்றும் இஹ்சான் பள்ளிவாசல் முன்பு PRAY for TURKEY and SYRIA என்ற பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.