நீலகிரி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ். இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் வழியாக தமிழக பதிவெண் கொண்ட லாரியில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவலர் மகேஷ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர், கூடலூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடியில் குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அந்த லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.