கோவை மாநகரில் வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மாநகர போலீசார் எச்சரிக்கை!

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரனை பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், வரும் ஜூன் 26 முதல் ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மாநகரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மையப்படுத்தி மோட்டார் வாகன சட்டங்களை கடுமையாக போலீசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிப்படி நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் கோவை மாநகரில் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரனை பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

அவ்வாறு ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter