தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ள அவர் "ரொம்ப நல்ல செய்தி" என்றும் "விடுதலை செய்ய வேண்டியது தான் முறை" என்றும் தெரிவித்தார்.
கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்ததற்கு சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழுவின் முன்னாள் தலைவர் கார்த்திகேயன் கோவையில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோவை நன்னெறி கழகத்தின் 62-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் சிறப்பு வாய்ந்த விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.ஆர் கார்த்திகேயனுக்கு நன்னெறி செம்மல் விருது வழங்கப்பட்டது.

இவர் கோவை அருகே உள்ள தேவராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று கடந்த 1964-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார் கார்த்திகேயன். காவல் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் பொறுப்பு வகித்த இவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.,யின் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராகவும் இருந்தார்.

நிகழ்ச்சியில் நமது சிம்பிளிசிட்டி செய்திக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ரொம்ப நல்ல செய்தி. விடுதலை செய்ய வேண்டியது தான் முறை.
நான் பல இடங்களில் விருது வாங்கி உள்ளேன். ஆனால், சொந்த மண்ணில் வாங்கிய விருது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கிருஷ்ணராஜ் வானவராயர், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் வாய்மையே வெல்லும் என்னும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர்.
