திருப்பூர் : 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்டோபர் 9-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் : 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்து அக்டோபர் 9-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூரில் கடந்த 2-ம் தேதி முதல்வ இன்று வரை என மூன்று நாட்கள் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 372 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று மாற்றுத் திறனாளிகள் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இம்மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தமிழகம் முழுவதும் கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி மறுக்கப்படுவதைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக மிகப்பெரிய காத்திருக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மாற்றுத் திறனாளிகள் 75 சதவிகித கட்டண சலுகை பயணம் உள்ளூர் மற்றும் நகரப் பேருந்துகளில் மறுக்கப்படுவதாக, வரும் செப்டம்பர் 25-ம் தேதி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக மிகப்பெரும் போராட்டம், நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு ஊனமானோருக்கு அரசு வேலை நிவாரணம் வழங்க வேண்டும். பாசிச பா.ஜ.க., அரசு ஒழிக என முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்ட சோபியாவை விடுதலை செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகள் குறை கேட்புக் கூட்டத்தை முறைப்படுத்தி நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்ஸிராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்பட புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.