கோவை : கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி சந்தேகத்திற்கு இடமான இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாகக் கூறி சந்தேகத்திற்கு இடமான இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையானது கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7,000 வெளிநோயாளிகளும், 1,600 உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, பிரசவத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த பிரசவ வார்டில் மட்டும் தினமும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்க்க வருகின்றனர்.
இந்த தாய், சேய் வார்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், கேமரா வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. அதேபோல, கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகன திருட்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவர் மருத்துவமனைக்குள் உள்ள தாய், சேய் பிரிவில் சுற்றித் திரிந்துள்ளார்.
இந்த இளைஞர் மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை திருட முயற்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, பணியில் இருந்த தனியார் காவலாளியில் ஒருவரான கீதா என்பவர் சந்தேகத்திற்கிடமான இளைஞனை பிடிக்கும்போது அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார். இதனால், அருகில் இருந்த பிற காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.