கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் கால்நடைகள் உட்கொள்வதால், உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் கால்நடைகள் உட்கொள்வதால், உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் சுப்ரமணியபாளையம் அமைந்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகளில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் ஒரே பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி ஊழியர்கள் இந்தக் குப்பைகளை அகற்றாததால், மலை போல குப்பைகள் குவிந்துள்ளன. இதனை, அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய், குதிரை மற்றும் கழுதை போன்ற கால்நடைகள் உட்கொள்கின்றன. அப்போது, பிளாஸ்டிக் பொருட்களையும் அவை உண்பதால், உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.

"குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறினால், இந்தப் பகுதி வடக்கு மண்டலத்தின் கீழ் வருவாகக் கூறுகின்றனர். மேலும் ஒரு சிலர் இது குறித்து தெரியாது எனக் கூறுகின்றனர். கவுன்சிலருக்கு அதிகாரம் கிடையாது. எனவே, அவரிடம் முறையிட முடியாது. இருப்பினும் இந்த நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளோம். கால்நடைகள் குப்பைகளை உட்கொள்கின்றன. மேலும், அவற்றை சாலைகளில் பரப்பி விடுகின்றன. இதனால், வாகனங்களை ஓட்டுவதில் சிரம் ஏற்படுகிறது," இவ்வாறு கூறுகிறார் அப்பகுதிவாசி.
மேலும், தற்போது பெய்யும் தென்மேற்கு பருவ மழையினால் குப்பைகள் ஈரமாவதுடன், நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரமணியபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றொரு பகுதிவாசியான ராஜ்குமார் கூறுகையில்," குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், கொசுக்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. குப்பைக் கூழங்கள் கொசுக்களின் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இதனிடையே, இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது:- வாரம் ஒருமுறை குப்பைகளை அகற்றி வருகிறோம். குதிரை உள்ளிட்ட கால்நடைகள் அங்கு உலா வருவது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்திகிறது. அவற்றின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
