கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

போத்தனூர் செயின்ட் ஜோசப் சர்ச் அருகே தொடங்கும் இந்த ரயில்வே பாலம், செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளிங்கிரி காம்ப்ளக்ஸ் அருகே முடிவடைகிறது. 1.1 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. முன்னதாக, பாலம் திறந்து வைக்கப்படுவதற்கு முன், அந்த பகுதியில் வழக்கம் போல அ.தி.மு.க., தொண்டர்கள் பேனர்களை வைத்தனர். அதில் இருந்த ஒவ்வொரு பேனர்களிலும் வித்தியாசமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு பேனரில், பாலத்திற்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றொரு பேனரில், ரூ.24.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.

இந்த சூழலில், தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் போத்தனூர் ரயில்வே மேம்பாலம் ரூ.22 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியினரின் பேனர் தொகைக்கும், மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் உள்ள தொகைக்கும் சுமார் ரூ.9 கோடி வித்தியாசம் வருகிறது.
இதனால், இந்த நிதியில் எது உண்மையாக பாலத்திற்காக ஒதுக்கப்பட்டது? என்றும், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பாலத்திற்கு செலவிடப்பட்டதா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.