கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் விற்பனையாகும் மீன்களில் எந்த ரசாயனமும் இல்லை என்று உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் நடத்திய ஆய்வுக்குப்பின் மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அங்கு விற்பனையாகும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இன்று உக்கடம் மீன் மார்க்கெட் சில்லறை விற்பனை நிலையத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள 64 கடைகளில் 45 கடைகள் மீன்கள் விற்பனைக்கென்றே பிரத்தியேகமாக செயல்படுபவை.

அங்கு மீன்கள் சுகாதாரமாக விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் உபயோகிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் அங்கு விற்பனையாகும் மீன்கள் சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மீன் வளத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன் கூறுகையில், "மீன் விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்படும் மானியங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் ஆய்வு மேற்கொண்டதில் மீன்களில் எந்த விதமான ரசாயன பொருட்களும் கலக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மீன் விற்பனையாளர்களிடம் மீன் விற்பனை குறித்த யுத்திகளும் எடுத்துரைக்கப்பட்டது." என்றார்.

இது குறித்து, உக்கடம் மீன் மார்க்கெட் சங்க தலைவர் H.S. பாவா கூறுகையில், "இங்கு தரமான மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. கடற்கரையில் இருந்து மீன்கள் வரும் போதே வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் ரசாயனம் கலந்த மீன்கள் கொடுத்தால் அது திருப்பி அனுப்பப்படும்." என்றார்.

இந்த ஆய்வின் போது மீன் மார்க்கெட் செயலாளர் காதர், மற்றும் மீன் வளத்துறை ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.