மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம்.
மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம்.
இதில் குறிப்பிடத்தக்கது நம் உடல் மற்றும் அறிவுத்திறனை ஒரு சேர செழுமைப்படுத்தும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் விளையாடாமல் விட்ட அந்த விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
கில்லிதாண்டு, பரமபதம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம், சொட்டாங்கல், நொண்டியாட்டம், சிலம்பாட்டம், உண்டிவில், பம்பரம், பட்டம் விடுதல் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைய இளையதலைமுறை குழந்தைகளின் கவனத்திற்கே கொண்டு செல்லப்படுவதில்லை.

நினைவாற்றலை அதிகரித்து கொடுத்து வாங்கும் பண்பை வலியுறுத்தும் பல்லாங் குழியாட்டம், எத்தனை முறை தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி பெற ஊக்குவிக்கும் பரமபத விளையாட்டு, கவன சிதறலை நேர்படுத்தும் சொட்டாங்கல், மனம் மற்றும் உடல் வலிமைக்கான சிலம்பாட்டம் என அனைத்து விளையாட்டுக்களும் மறைந்து போய், இன்றைய குழந்தைகள் செல்போனுக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செல்போன் விளையாட்டு, கம்யூட்டர் கேம்ஸ், கார்டூன் வீடியோஸ் என வீட்டினுள் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதால் குழந்தைகளின் உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு இன்றைய பள்ளி பருவ மாணவ மாணவிகளிடம் மறைந்து வரும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் இன்று நடத்தப்பட்டது.
'லாலிபாப் மழலையர் பள்ளி' (lollypop kids school) சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். இந்த விளையாட்டுக்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த சிறுவர்-சிறுமியர்களுக்கு, விளையாட்டுக்களை விளையாடும் விதங்கள் குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.