திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.
திருப்பூர்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் தனசேகர் சாம்பியன் பட்டம் வென்றார்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகர் (21). தனது பள்ளி பருவம் முதலே பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த தனசேகர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து எப்பொழுதும் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வார்.
கல்லூரியில் நடந்த ஆணழகன் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர், பல்கலைக் கழகம் அளவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து மிஸ்டர். கோயம்புத்தூர் போட்டியில் பங்கேற்று ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்றார்.
மீண்டும் மிஸ்டர்.தமிழ்நாடு, மிஸ்டர்.இந்தியா போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற தனசேகர் தனது வெற்றி மைல்கல்லில் மேலும் ஒரு மகுடமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற உலக அளவிலான ஆணழகன் 'மிஸ்டர் மசில்-2018' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் சென்ற ஒரே போட்டியாளர் தனசேகர். இவர் 22 வயதிற்குட்பட்ட பிசிக் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
உலக ஆணழகன் தனசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஏசியன் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வேன்." என்றார்.