நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி : உதகையில் ரூ. 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜே.சி.பி. இயந்திரத்தை திருடிச் சென்ற திருடனை புதுக்கோட்டையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உதகை அருகே நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்டன். இவர் தனது மனைவி மங்களாவின் உதவியுடன் சுயஉதவிக்குழு மற்றும் வங்கியின் மூலமாக ரூ. 70 லட்சம் மதிப்புள்ள மாதத் தவணை முறையில் ஜே.சி.பி., இயந்திரத்தை வாங்கினார். மேலும், இந்த இயந்திரத்தை இயக்க மாத சம்பளத்திற்கு செல்வம் என்பவரை ஓட்டுநராகவும் பணிக்கு அமர்த்தினார். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் ஜே.சி.பி., ஆழ்துளை கிணறுகள், பறைகள் உடைக்க மாவட்டம் நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இதனால், போதிய வருமானம் இல்லாத நிலையில், ஓட்டுநர் செல்வனுக்கு மாத மாத சம்பளம் கொடுத்து வந்தார்.
இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜே.சி.பி., இயந்திரத்துடன் ஓட்டுநர் செல்வம் மாயமானார். பின்னர், இது தொடர்பாக, தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள எஸ்.பி., சண்முகப்பிரியாவிடம் நேரடியாகப் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, ஜே.சி.பி.யுடன் மாயமான செல்வத்தை தேடி வந்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, செல்வத்தின் செல்போன் சிக்னல் டவர் புதுக்கோட்டை ஆண்டிப்பட்டியைக் காட்டியதால், தனிப்படை போலீசார் ஆண்டிப்பட்டி கிராமத்திற்கு விரைந்தனர்.
அங்கு, ஜே.சி.பி., இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த செல்வத்தை கைது செய்து, ஜே.சி.பி., இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், காந்தல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட செல்வம், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.