நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி : 9 பேரை பலி கொண்ட குன்னூர் பேருந்து விபத்தின் போது, மனிதாபிமான அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களை நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மந்தாடா குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடத்துநர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது, அருகில் இருந்த பொதுமக்கள், உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், விபத்து நடந்த ஒருமணி நேரத்தில் மீட்பு பணிகள் முடிந்தது.

இந்த நிலையில், இந்தக் களப்பணியில் கலந்து கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரையும் பாராட்டிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, இது மகத்தான மனிதாபிமானம் கொண்ட நிகழ்வு என பலரையும் பாராட்டினார். மேலும், இவ்வளவு பெரிய விபத்து நடந்த போதும் அமைதியாக ஆத்மார்த்தமாக அனைவரும் மீட்பு பணிகள் ஈடுபட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இதைத்தொடர்ந்து, அவர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திருமேணி, கேத்தி காவல் ஆய்வாளர் விநாயகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.